கொங்குமண்டலத்தின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள சேலம் மாநகரம் மாங்கனிக்கு மட்டும் பெயர்பெற்றதன்று. மூதறிஞர் இராஜகோபாலாசாரியார், சீர்திருத்தவாதி விஜயராகவாசாரியார், வரதராஜுலு நாயுடு போன்ற உயர்ந்த தலைவர்களைத் தந்த வகையிலும் பெயர்பெற்றது. ஆனால் இவர்களெல்லாம் இந்திய அரசியல் வானில் ஒளிவீசுவதற்கு முன்பே செந்தமிழ் நாட்டின் புகழ், இந்திய அரசியலில் ஒளிர்வதற்கும், நம் பழந்தமிழ் நூல்கள் புத்துயிர் பெற்று மிளிர்வதற்கும் மூலகாரணமாய்த் திகழ்ந்தவர் சேலம் தந்த செம்மலான இராமசாமி முதலியார் ஆவார். சட்டம் பயின்று அதனையே தம் தொழிலாகக் கொண்டிருந்தபோதிலும், தமிழ் மீதும் தமிழிலக்கியத்தின்மீதும் இராமசாமி முதலியார் கொண்டிருந்த காதல் மட்டற்றது. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களைத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பதிப்பிக்க மூலகாரணமாக இருந்தவர் முதலியார். இலக்கியத்துறைக்கு அரும்பணிகள் ஆற்றிய இராமசாமி முதலியார் அரசியல் துறையிலும் சாதனைகள் பல நிகழ்த்தியவர். இந்தியாவின் தணியாத விடுதலை வேட்கையை இங்கிலாந்து சென்று அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்த முதல் தமிழர் இராமசாமி முதலியார் ஆவார்.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more